Thursday 6 September, 2018

திருமணநாள் - 2018ஆம் ஆண்டு

ஐந்தில் மட்டுமல்ல, ஐந்தாம் வகுப்பில் பதிந்ததும் அழியாது!

இளம்பருவத்தில் சந்தித்த நாட்கள்
இன்னவென்று தெரியாமல் பழகிய நாட்கள்
மரியாதையினை மறந்த பழக்கங்கள்
(வாடா போடா, வாடி போடி) உரையாடல்கள்
கள்ளமும், கபடமும் இல்லா ஊடல்கள்

கோடை விடுமுறை நோக்கி காத்திருந்த நாட்கள்
சென்னை உறவினர்கள் என்ற மிடுக்குடன் திரிந்த நாட்கள்

வாங்கி வந்தது முறுக்கு தான், என்றாலும் சென்னை முறுக்காயிற்றே!

புகும் வீடு என்பதாலோ என்னவோ, பெரியவளாகியது என் வீட்டில்!
பெரியவளாய் ஆனது சமூகத்திற்கு தான், எனக்கல்லவே!
மீண்டும் துவங்கிய மரியாதையினை மறந்த பழக்கங்கள்!
அவள் சென்னை முறுக்காயிற்றே 😊

கல்லூரி வேலூர் என்றதும், சம்மதம்
என் தங்கையினை சந்திக்கும் வாய்ப்பிற்காக!

அங்கு தங்கையினை காண, தங்கியதன் விளைவு,
-- சுகமானது வேலூர் முதல் சென்னை பயணம்
-- சுமையானது சென்னை முதல் வேலூர் பயணம்

கடற்கரை கண்டதில்லை
பூங்காவில் ஒதுங்கியதில்லை
இருசக்கர வாகனப் பயணமில்லை
திரையரங்கும் சென்றதில்லை

ஆம், சென்னையிலே இருந்தும் கூட – நாங்கள்
சென்னையிலே இருந்தும் கூட

அந்த சிறு பத்திரிக்கை தான் துவக்கப்புள்ளியா?
இல்லை! இல்லை! அது ஒரு அடையாளம்! அவ்வளவே!

சிறகொடிந்த பறவையாக பாதியில் நிறுத்திய படிப்பு!
பதின்பருவத்திலே பணி செல்லும் பாவம் வேறு
அன்று நான் கூறியது  ”நீ படும் துன்பம் நிரந்தரமல்ல”

விட்ட முயற்சியாக இருந்த கல்வியினை,
விடாமுயற்சியால் வென்றாள்!
இன்று இளநிலை பட்டதாரியாக!

இருபது வருடங்கள் கடந்த பழக்கம்
அதிலும் பாதிக்கு, மேல் என் பாதியாக!

இது எப்படி நடந்தது என்றே அறியவில்லை நான்!
அவள் என்னவள் ஆனது
நான் அவளின் பாதியானது

ஆண்டவனின் அருளும், கடவுளின் ஆசியும்,
அன்பு உறவுகளின் பாசமும்
தமிழ் சொந்தங்களின் அன்பும் இருக்கும் வரை,
பதின்மூன்று ஆண்டுகள் கடந்து அல்ல,
இன்னும் பல்லாண்டு ஒன்றாக கடப்போம் என்ற நம்பிக்கையுடன்!

-தெய்வேந்திரன்

Saturday 10 February, 2018

திருமணநாள் நினைவு கூர்தல்

எப்படி நடந்தது என்றறியவில்லை நான்!!!

அவள் என்னுடன் இணைந்து, 12-ஆண்டுகள் பயணித்தது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை..

இது நான் செய்த தியாகமா? இல்லை,
என்னவள் செய்த தியாகமா? இல்லை,
இருவரும் இணைந்து செய்த சாதனையா ?

முதலாம் ஆண்டில், (அறியா வயதில்) பெரிய எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய மண வாழ்வு, 

சில பெரிய எதிர்ப்புகளுடன் கடந்த வாழ்வு,
(இன்னும் எதிர்ப்புகள் இருக்கவே செய்கின்றன)

சில பெரிய ஏற்றத்துடனும்,
பல சிறிய ஏமாற்றங்களுடனும்,

சில பெரிய ஊடல்களுடனும்,
பல சிறிய ஊடல்களுடனும்,

பல முறை ”பிரிந்தே சென்று விடுவேன்” என முறைத்த பொழுதுகளிலும், நாட்களிலும்
பயணித்தோம் நாங்கள்...

முத்துநகரில் துவங்கி, ஐடி தலைநகரில் கடந்து, இன்று, சிலிகான் வேலியில் நிலை கொண்டுள்ளது எங்களது மண வாழ்வு...

ஆக, இன்று 12 ஆண்டுகள் முடிந்து, 13-ஆம் ஆண்டில் நடை எடுத்து வைக்கின்றோம்...
இன்னும் பல ஆண்டுகள் ஒன்றிணைந்து பயணிப்போம் என்ற நம்பிக்கையில்..

”கடவுள்” மற்றும் ”ஆண்டவரின்” ஆசிர்வாதமும்,
பெற்றவர்கள், பெரியவர்களின் ஆசியும்,

நண்பர்களின் அன்பும் இருக்கும் வரை, எங்களது கனவு நிறைவேறும் என்பதில் எனக்கு துளி ஐயமில்லை...

07 Sep 2017 is our 13th Wedding Day (12th Wedding Anniversary)...

பசுமரத்தாணி 2 (சிறு பாகம்)


எழில் அப்பா: இந்தா பாரு, எழில், முதல்ல டிவிய switch Off பண்ணு, அப்புறம் சாப்பிடு!!
எழில்: ஓ.. அப்டீனா,
”சாப்பிட்டுட்டே” டீவிய பாக்கக்கூடாது
”சாப்பிட்டுட்டு” டீவி-ய பாக்கணுமா அப்பா?

எழில் அப்பா: அடேயப்பா, நான் சொன்ன விசயத்த, ”அழகான வார்த்தைகள்” பயன்படுத்தி சொல்றியே ராசா.. நல்லா வருவ எழில்..

எழில்: சரிப்பா, இனிமேல் டீவிய ஆஃப் பண்ணிட்டே சாப்பிடுறேன் அப்பா.

நம்ம சொல்ற விசயத்த பசங்க மனசுல பதியிற மாதிரி சொன்னா போதும். கற்பூரம் மாதிரி பிடிச்சிக்கிறாங்க பசங்க..

ஏன்னா, குழந்தைகள் எப்பவுமே பசுமரம்.. நாம தான் நல்ல ஆணிய பதமா அடிக்கனும்
அது, நிச்சயமா, ஆழமா வேர் வரை செல்லும்!!!

இன்னும், ஒரு பசுமரத்தாணி பதிவுடன் அடுத்து வருகின்றேன்!

நன்றி.

யூஸ் அன்ட் த்ரோ...

நண்பனிடம் ஓசி மை வாங்கி தேர்வு எழுதிய நியாபகங்கள்!
குறைந்தே போனது ஓசி மை தந்த பிணைப்புக்கள்!

பிணைப்புகளை ஓரங்கட்டிய, ”யூஸ் அண்ட் த்ரோ பேனாக்கள்” !
பெரிய இடத்து நண்பர்களிடம் மட்டுமே உலா வந்த ஹீரோ பேனாக்கள்
ஹீரோவையும் சென்றவிடம் தெரியாமல் அழித்த ரேனால்ட்ஸ் பேனாக்கள்!..

ரோட்டோமேக்ஸ் போன்ற இன்னும் பல “பிளாஸ்டிக்” அரக்கன்களை,
”பேனா உருவில்” வரவேற்ற தலைமுறை நாங்கள்..

கண்ணாடி டம்ளரில் மட்டும் டீ குடித்து வளர்ந்தவர்கள் நாங்கள்!

யூஸ் அண்ட் த்ரோ கப்-பில் குடித்தால் நாகரிகமென்று நினைக்கத் துவங்கிய தலைமுறையும் நாங்களே!!!

வாழை இலையில் உணவருந்தி வளர்ந்த தலைமுறையும் நாங்கள் தான்!

நெகிழித்தாள் இலையில் அவசர உணவகங்களை
உருவாக்கிய தலைமுறையும் நாங்களே தான்!

அண்ணாச்சி கடையில் பழைய செய்தித்தாள் பொட்டலங்களில் பருப்பு, சீனி வாங்கிய நியாபகங்கள்!

”அருமை(!) அங்காடி”களில் (Super Market), நெகிழிப்பை பொட்டலங்களில் வாங்கினால் ஹைஜீனிக் என்று நினைக்கத் துவங்கியதும் நாங்கள் தான்!

சில்வர் டிஃபன் பாத்திரங்களில் உணவு வாங்கிய தலைமுறையும் நாங்களே
நெகிழிப்பை பார்சல் உணவை வேண்டியதும் நாங்களே!

இவ்வாறு தினசரி வாழ்வில் ஒன்றோடு ஒன்றாக இணைந்து விட்ட ”யூஸ் அண்ட் த்ரோ” வாழ்வியல், நம் உறவுகளையும், நட்புக்களையும் யூஸ் அண்ட் த்ரோ-வாக மாற்றுவது வெகு தூரத்தில் இல்லை!!

வேதனையுடன்....
-- தெய்வேந்திரன்

Wednesday 17 January, 2018

பூச்சி விரட்டி... தடுப்பூசி...

வணக்கம்...

பூச்சி விரட்டி பயன்படுத்தி, வளர்க்கப்பட்ட "தலைமுறையின்" சார்பாக பேச வந்துள்ளேன்...

அட ஆமாங்க..
இந்த பூச்சிக் கொல்லி மற்றும் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி வளர்த்த காய்கறி, பழங்களைக் கொடுத்த வளர்ந்த தலைமுறை நான்...
Horlicks குடித்து வளர்ந்த தலைமுறை!!!
தடுப்பூசி போட்டு வளர்ந்த தலைமுறை!!!

எனது தந்தைக்கும் எனக்குமான விவாதங்களில் அடிக்கடி இடம்பெறும் விவாதப்பொருட்கள்..
1) நெகிழிப்பைகள் பயன்படுத்துவது
2) உரம் பயன்படுத்துவது
3) பூச்சிக்கொல்லி பயன்படுத்துவது
4) பாரம்பரிய விளைபொருட்கள்

இதில், சமீப காலத்தில் விவசாயம் தொடர்பான விவாதங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது. நான் கூறிய ஒரே காரணத்திற்காக, இது வரை பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதன் விளைவு, அனைத்து பயிர்களிலும் பூச்சிகள்!!!

இலைகள் முற்றிலும் அரிக்கப்பட்டு விட்டன...
உளுந்தங்காய்களில், பயிர் இல்லை.. உண்ணப்பட்டு விட்டன..
விளைச்சல் முழுவதுமாக பொய்த்து போன நிலைமை...

அருகில் இருக்கும் பயிர்களைப் பார்த்து பார்த்து, எனது தந்தை என்னிடம் ‘சிறிதாக’ கோபத்தினை காட்டியதன் விளைவாக,

எனக்குள் தோன்றிய விடயங்கள்..
1) மருந்து அடிக்காவிடில், பயிர்களுக்கு ஏன் எதிர்ப்பு சக்தி வரவில்லை?
2) காலம் தவறி விளைவித்ததாலா?
3) மழை காரணமா?
4) பக்கத்து தோட்டத்தில் அடித்த பூச்சி விரட்டிகளால், விரட்டப்பட்ட பூச்சிகள் படையெடுத்ததன் விளைவா?
அல்லது,
5) விதைகள் தரம் குறைந்தனவா?

எனக்கு 5-வது காரணம் தான் தலையான காரணமென்று தோன்றியது. தரமில்லாத விதைகளிலிருந்து, எதிர்ப்பு சக்தி இல்லாத பயிர்கள் விளைந்ததன் விளைவு, பூச்சிகளுக்கு இரையாக...

ஆக, விவசாய அலுவலகமே, தரமில்லாத விதைகளை வழங்கி வருவது வேதனை தரக்கூடிய ஒன்று...
அவர்களே, அதற்கு வேண்டிய “செயற்கை உரம்” மற்றும், “பூச்சிக்கொல்லி” வழங்குவது இன்னும் கொடுமை.

பாரம்பரிய நிலத்தில் விளையக்கூடிய பயிர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி இருக்கும். எங்கள் ஊரில் (வி.வேடபட்டி) கீழ்கண்ட பயிர்கள் மட்டுமே விளைந்த காலம் அது...

1) சீனிக்கிழங்கு (Sweet Potato)
2) சிறுதானியங்கள்
  (கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், குதிரைவாலி அரிசி)
3) பனங்கிழங்கு

மேற்கூரிய பயிர்களுக்கு தேவையான நீர் மிகக்குறைவு..
வருமானம் குறைவு எனினும், மகிழ்வான வாழ்க்கை இருந்த காலம்..
மக்கள் மட்டுமல்ல, மண் கூட மகிழ்வாக இருந்த காலம் அது.

பணப்பயிர்களின் மோகம் அதிகரிக்க அதிகரிக்க, மண் வளம் குன்றிப்போனது
நீர் தேவையும் அதிகமானது
எதிர்ப்பு சக்தி முற்றிலும் அழிந்து போனது..

இதை எப்படி சரி செய்வது? யார் சரி செய்வது?

இயற்கை விவசாயம் செய்யுங்கள் எனச் சொன்னால், ”நீ வந்து செய்”, என சொல்கின்றார்கள் எனது அப்பா...

இயற்கை வேளாண்மை செய்வதற்கு ஆசை தான்..
ஆனால், எப்படி செய்வது? என்று அதைச்செய்வது? - இன்னும் விடை தெரியா கேள்விகள்.

நமது தேவைகள் குறையும் காலம் எதுவோ, அதுவே நமது சிறு சிறு ஆசைகள் நிறைவேறும் காலம்!!!

மொத்தத்தில்,
பாரம்பரிய நிலத்தில் அதுவாகவே வளரும் பயிர்களுக்கு எதிர்ப்பு சக்தி மிக மிக அதிகம்... உதாரணமாக, எங்களது காட்டில் வளரும், அதலக்காய் என்னும் பயிர், மழைக்காலங்களில் தானாகவே விளைந்து காய்கள் தருகின்றது.. அதுவல்லவோ அதிசயம்??

உரமில்லை.. பூச்சியில்லை... இன்னும் வாழ்கின்றது!!!

அதைப்போல் தான், குழந்தைகளுக்கும்...

கருவில் உருவான தினத்தில் இருந்தே, செயற்கை மருந்தில் வளரும் குழந்தை எவ்வாறு எதிர்ப்பு சக்தியுடன் வாழும்? ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு தடுப்பூசி, மருந்துகள்... ச்சே...

மருத்துவ அரசியல்.. மிக மிகக் கொடுமையானது!!!

நன்றி..